*இன்று தினமணி பேப்பரில் வந்துள்ள செய்தி !!!!*

*இத்துடன் இணைத்து உள்ளது!!! *
*இராமன்*

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று
பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்
நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம்
தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட
ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம்
செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக்
கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை
மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.

 தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு
பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள்
கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும்
இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர்
இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?

 தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும்,
பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும்
எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம்
தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி
வருகிறது.

 வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும்,
தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால்
பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு
வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல்
ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு
டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று
உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும்
இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட
வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம்
இல்லாமல் இயலாது.

 இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத்
தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன
தவறு?

 இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம்
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும்,
விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு
மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த
இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.

 நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு
ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி
நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச்
செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க
மறுக்கிறார் என்று தெரியவில்லை.

 கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில்
காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர்,
இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.

 தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட
சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது
உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு
மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு
செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை
எதுவும் இல்லை.

 அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர்
மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச்
செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள
உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும்
விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும்
பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

 தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால்
கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய
முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.

 தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப்
பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு
செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு
செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.

 இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப்
போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே
வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக்
கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது
நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக
நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?

 வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும்,
கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும்
கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல்
அல்லவா கேட்கிறது, ஏன்?

Reply via email to