முத்துக்குமரனே கிரிவலம் வரும் அற்புதம்!




*பழநி மகிமை - 5*

முற்காலத்தில் பழநி, சேரமன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டின் தெற்கு
எல்லையாக விளங்கியது. பழநி மலையை ஒட்டி இருக்கும் பகுதியை வைகாவூர் நாடு
என்றழைத்தனர். மலைக் கோயிலிலுள்ள கல்வெட்டுகளும் பழநிப் பகுதியை வைகாவூர் நாடு
என்றே கூறுகின்றன. கல்வெட்டுகளில் ‘வைகாவூர் நாட்டுப் பழநியில் சுப்ரமண்யப்
பிள்ளையார்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் ‘‘சேரர் கொங்கு
வைகாவூர் நனாடதில் ஆவினன்குடி’’ என்று பாடுகிறார். சுமார் 1360 ஆண்டுகளுக்கு
முன்னர், சேர நாட்டில், கொடுங்கோளூர் எனும் தலத்தில், சேரமான் பெருமாள் எனும்
அரசர் ஆண்டு வந்தார்.

மிகுந்த சிவபக்தி காரணமாக, குடிமக்கள் கூறுவனவற்றைத் தாம் இருந்த இடத்திலேயே
தெரிந்து கொள்ளும்படியான வரம் பெற்றிருந்ததால் கழற்றறிவார் நாயனார்
என்றழைக்கப்பட்டார். இவரது உற்ற நண்பரான சுந்தரர், இறைவன் அனுப்பிய வெள்ளை
யானையின் மீதேறி கயிலைக்குச் சென்றபோது, தமது நண்பரான சேரமானை நினைத்தார். இதை
உணர்ந்த அரசர் தனது குதிரையின் செவிகளில் பஞ்சாட்சரத்தை ஓத, அது விரைந்து
சென்று சுந்தரரது யானையை வலம் வந்து, அவருக்கு முன்னதாகக் கயிலையைச்
சென்றடைந்தது.

ஆனால், அரசருக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. சுந்தரருக்காகக் காத்துக்
கொண்டிருக்கும் காலத்தை வீணாக்க விரும்பாத அரசன், அங்கிருந்தபடியே ‘திருக்
கயிலாய ஞான உலா’ எனும் பிரபந்தத்தை ஆசு கவியாகப் பாடினார். ‘உலா’ நூல்களுள்
இது முதன்மையானது. சுந்தரர் வந்தபின் அவருடன் சென்று சிவபெருமானைத் தரிசித்து,
நூலை அரங்கேற்றினார் அரசர். இத்தகு பெருமை வாய்ந்த சேரமான் பெருமானுக்கு
உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் எனும் நாட்டுப் பகுதியில் உள்ள
ஆவினன்குடியில் வாழும் முருகப் பெருமானே என்று பாடுகிறார் அருணகிரியார்.







*ஆதரம் பயில் ஆரூரர் தோழமைசேர்தல் கொண்டவரோடே முனாளினில்ஆடல் வெம்பரி மீதேறி
மா கயிலையில் ஏகிஆதி அந்த உலா ஆசு பாடியசேரர் கொங்கு வைகாவூர்
நனாடதில்ஆவினன்குடி வாழ்வான் தேவர்கள் பெருமாளே(‘நாதவிந்து’ -
ஆவினன்குடித்திருப்புகழ்)*

பாடல் பெற்ற தலமாகிய ‘தாழக்கோயில்’ எனப்படும் திருவாவினன்குடி வாழ் குழந்தை
வேலாயுதனைத் தரிசித்த பின், ‘ஊர்க்கோயில்’ என வழங்கப்பெறும் பெரியம்மை
திருக்கோயிலைத் தரிசிப்போம். பெரிய நாயகி அம்மை திருக்கோயில் பழநியின்
வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு, சத் (உண்மை)
சித் (அறிவு) ஆனந்தம் (இன்பம்) எனப்படும் சோமாஸ்கந்த தத்துவத்தை உணர்த்தும்
வகையில் சந்நதிகள் அமைக்கப்பட்டிருப்பதுதான். சிவபெருமானுக்கும் உமைக்கும்
நடுவே முருகன் வீற்றிருக்கும் அல்லது நின்றிருக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்தர்
எனப்படும். பெரிய நாயகி அம்மை, கைலாஸநாதர் இருவர் சந்நதிகளுக்கும் நடுவே
முருகப் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. உமைக்கும் சிவனுக்கும் நடுவே முருகன்
விளங்குவதைப் பகலுக்கும் இரவுக்கும் நடுவே தோன்றும் மாலைப் பொழுதுடன்
ஒப்பிட்டுப் பாடுகிறார் கச்சியப்ப சிவாசாரியார்.




*ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்பாலனாகிய குமரவேள் நடுவுறும்
பான்மை ஞான மேலுறும் இரவொடு பகலுக்கும்  நடுவாய்மாலையானதொன்று அழிவின்றி
வைகுமா றொக்கும்*

- என்பது அப்பாடல். கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூவர் சந்நதிகளுக்குத் தெற்கு
பாகத்தில் ஒரு அழகிய மண்டபத்துள் முத்துக்குமார சுவாமி தேவியருடன்
அமர்ந்திருக்கிறார். விழாக் காலங்களில் தேவியருடன் ஊர்வலம் வரும்
இப்பெருமானின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அம்மையும் அப்பனும்
இருபுறங்களிலும் இருந்த போதிலும், கோயில் கொடிமரம் முருகன் சந்நதிக்கு
எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலின் கிழக்குத் திருவாயிலில், ராஜகோபுரம் கட்டி
முடிக்கப்படாமல் பாதியிலேயே விட்டு வைக்கப்பட்டுள்ளது.

கோயில் பதினாறாம் நூற்றாண்டு மதுரை நாயக்கர் காலத்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால், ஆதாரமாகக் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. விசாலமான நவரங்க மண்டபம் ஒன்று
காணப்படுகிறது. அவ்வப்போது கோயிலைச் சீர்திருத்திப் புதுப்பித்த பெரியோர்களின்
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தலவிருட்சம் வில்வம். தண்டாயுதபாணி சார்புக்
கோயில்களுள் ஒன்றான இக்கோயிலிலும் ஆறுகால பூஜைகள் நடத்தப் பெறுகின்றன. பழநி
தைப்பூச விழாவிற்கான கொடியேற்றம் அம்மையின் கோயிலில்தான் நடைபெறுகிறது.

உற்சவ மூர்த்தியான முத்துக்குமாரசுவாமி, பார்வதி-பரமேஸ்வரர் திருமணம் உட்பட
அனைத்து விழாக்களிலும் முக்கியப் பங்கு ஏற்கிறார். வைகாசி விசாகத்தை ஒட்டி, 10
நாட்கள் இங்கு விமரிசையாக உற்சவம் நடைபெறுகிறது. விசாகத்தன்று சுவாமி
திருத்தேரில் புறப்பாடு காண்பார். அன்றைய தினம் முருகனுக்குப் பால் அபிஷேகம்
செய்து வணங்கினால் வாழ்வில் வளங்களும் பால்போல் பொங்கும் என்பது பக்தர்களின்
அசையாத நம்பிக்கை. 15 நாட்கள் பழநியில் நடக்கும் அக்னி நட்சத்திர விழாவில்,
14ஆம் நாளன்று முத்துக்குமார சுவாமி, அடிவாரத்திற்கு எழுந்தருளி பூச்சட்டி
மண்டபத்திற்கருகே பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்குகிறார்.


பின்பு இரவில் கிரிவலம் வந்து மீண்டும் அம்மையின் கோயிலுக்குத் திரும்பும்
காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக இருக்கும். சித்ரா பௌர்ணமி அன்று
முத்துக்குமாரர் வெள்ளி ரதத்தில் வந்து அருள்பாலிக்கிறார். இவை தவிர
சூரசம்ஹாரம், விஜயதசமி ஆகிய விழாக்களிலும் முக்கிய நாயகனாக வலம் வருகிறார்.
விழாக்கள் முடிவுறும் போது கோயில் யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள தீர்த்தக்
குடத்தை எடுத்துக் கொண்டு போய், மலையில் எழுந்தருளியிருக்கும் பழநியாண்டிக்கு
அர்த்த ஜாம பூஜையின்போது அபிஷேகம் செய்வது வழக்கம். பழநிப் புராணத்தில் பெரிய
நாயகி அம்மையின் சிறப்பு பற்றிய பாடல் ஒன்று அமைந்துள்ளது.








*அருவுருவம் தணிந்த சச்சிதானந்த நிமலன் அருள் சக்தி, முத்திக்குஒரு முதல்வி,
தொழில் ஐந்தும் இயற்றி, நால்வகைத் திறனும் உயிர்க்கு நல்கிஇருவினை ஒத்தவர்
ஏத்த, மனத்தவிசில்                  இனிது வீற்றிருந்து, எஞ்ஞான்றும்கருணை
பொழி பெரிய நாயகி மலர்ச்சீறடி               எமது கருத்துள் வைப்போம்*

(அருவமும் உருவமும் இல்லாத, சத்து - சித்து - ஆனந்தம் என்னும் மூன்றினையும்
உடைய நிர்மலரான சிவபெருமானது திருவருட் சத்தியும், முத்திக்கு ஒரு தலைவியும்,
ஸ்ருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹாரம் - திரோதானம் - அனுக்ரஹம் எனும் ஐந்தொழில்களையும்
செய்து, ஆன்மாக்களுக்கு அவற்றால் தனு, கரண, புவன, போகம் எனும் நால்வகைப்
பொருட்களையும் கொடுத்து, நல்வினை-தீவினை எனும் இருவினைகளும் சமமான பக்குவமுடைய
அடியார் துதிக்க, அவரது மனமாகிய கமல ஆசனத்தின் கண், இனிமையுடன் வீற்றிருந்து
எந்நாளும் திருவருளைப் பொழிகின்ற பெரிய நாயகி அம்மையாரது தாமரை மலர் போலும்
திருவடிகளை எமது மனக்கண் வைத்துத் தியானிக்கிறேன்)

அருணகிரிநாதரும் ‘போர்பறையை விரும்பும் ருத்ரி, கரியமேகம் போன்ற கூந்தலை
உடையவள், பரமர் பக்கம் உறைகின்ற சக்தி, எமது தாய் பழைய பார்வதி, துர்க்கை,
பெரிய நாயகி எனும் திருநாமத்தை உடையவள் பெற்ற பெருமாளே,’’ என்று பழநியில்
பாடியுள்ளார். அடுத்து நாம் செல்லவிருப்பது, பழநிக்கு வடக்கே பழைய தாராபுரம்
சாலையிலுள்ள பெரிய ஆவுடையார் கோயில். சேர, சோழ, பாண்டியரால் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஈசுவரன் சுயம்புலிங்கம்,
மேற்குநோக்கிய கோலம்.

நாரதர் அளித்த பழம் தனக்குக் கிட்டவில்லை என்ற காரணத்தினால் அனைத்தையும்
துறந்து தண்டாயுதபாணி எனும் கோவணாண்டியாக, சிவகிரி மேல் வந்தமர்ந்த தம் மகனைத்
தேடிக் கொண்டு, அம்மையும் அப்பனும் பழநி வந்தனர். ஷண்முக நதிக்கரையில் இருந்த
பசுமையான வயல்களும், அங்கு உலவிக் கொண்டிருந்த மான்களும் மயில்களும்
சிவபெருமானை ஈர்த்தன. அவர் அவ்விடத்தை விட்டு நீங்க மனமின்றி அங்கேயே அமர்ந்து
பக்தர்களுக்கு அருள்பாலிக்க சித்தமானார். மகனைத் தேடியல்லவா வந்தோம் என்று
அம்பிகை நினைவுறுத்தியதும் ‘அதோ’ என்று சிவகிரியைச் சுட்டிக் காட்டினார்
இறைவன்.

உடனே சென்று குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தாயுள்ளம் ஏங்க, உமை
ஈசனிடமிருந்து பிரியாவிடை பெற்றாள். பிரிய மனமில்லாமல் அம்பிகை
சென்றதால், பிரியாநாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் ஈசன் விடை
கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டனர். இதுவே காலப்போக்கில்
மருவி பெரிய நாயகி என்றும் பெரியாவுடையார் என்றும் பெயர்வரக் காரணமாயிற்று.
ஷண்முக நதிக்கரையில் நதியை நோக்கிய வண்ணம் உறைந்தார் ஈசன். நாயக்க மன்னர்கள்
ஊருக்குள் பெரியநாயகி அம்மைக்குக் கோயில் எழுப்பினர்.

ஈசன் தேர்ந்தெடுத்து உறைந்த ஷண்முக நதிக்கரையில் நின்று ஒரு காலத்தில் அது
சுழித்தோடிய காட்சியை மனக்கண்முன் கொண்டு வருகிறோம். ஷண்முக நதியின் பெருமையை
பாலசுப்ரமணியக் கவிராயர் தனிச் சருக்கமாகவே பாடியுள்ளார்.





*சத்தியோஜாதம் ஆதி முகங்களில் கொன்றை, சாமம் சுத்தம், மாயார்த்தம், ஞானநதி இவை
தோன்றி, மூலவத்திரம் தனில் மைந்தோகை மாநதி தோன்றி, கங்கை ஒத்த ஷண்முக
தீர்த்தத்தில் கூடி ஒன்றாய தன்றேசத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், *

தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகங்களினின்றும் முறையே கொன்றை நதி,
சாமதீர்த்தம், சுத்தநதி, மாயா தீர்த்தம், ஞானநதி ஆகிய ஐந்து நதிகளும்
தோன்றியும், மூல முகத்தினின்று பசிய மயூரநதி உற்பவித்தும், கங்கா நதியை ஒத்த
ஷண்முக தீர்த்தத்தில் ஒன்றாய்க் கலந்தன என்றும், பின் தருக்கள் நிறைந்த
கோங்கவனத்தின் கணுள்ள தேனு தீர்த்தத்தை அடைந்து அங்கு வீற்றிருந்தருளும்
சிவபெருமானது திருவடிகளைத் துதித்துச் செல்கிறது என்றும் பாடுகிறார். ஷண்முக
நதிக்கரையில் குடிகொண்ட சிவபிரான் அங்கும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

விராட மஹாராஜா காட்டு விலங்குகளை விளையாடச் சென்றபோது சிவனார் ஒரு அழகிய மான்
உருவம் கொண்டு அவன்முன் ஓடினார். மானை உயிருடன் பிடிக்க எண்ணி, அதன்பின்
ஓடினான் அரசன். மானும் அரசன் கையில் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. இறைவன்
இன்று லிங்க வடிவில் வீற்றிருக்கும் இடம் வந்ததும் புதருக்குள்
மறைந்துவிட்டது. கோபம் கொண்ட மன்னன் மான் இருக்குமிடம் நோக்கி அம்பைச்
செலுத்தினான். மான் மறைந்தது. மாறாகக் குருதி பெருக்கெடுத்து ஓடியது.

பதறிய மன்னன், தான் எய்த அம்பு ஒரு லிங்கத்தின் மீது தாக்கி அதிலிருந்து
செங்குருதி பெருக்கெடுத்ததைக் கண்டான். தனது தவறை எண்ணி அவன் புலம்பிய போது
இறைவன் அசரீரியாக எழுந்து தனக்கு அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டுமாறு
பணித்தான். அரசன் மானைத் துரத்தியபோது, அது ஓடிய இடம் இன்றும் மானூர் என்று
அழைக்கப்படுகிறது. அம்பினால் ஏற்பட்ட வடு லிங்கத்தில் உள்ளது. அம்மையும்
அப்பனும் லிங்கத்தில் உறைகின்றனர் என்பதைப் புலப்படுத்தும் வகையில்,
லிங்கத்தின் மேல் பகுதியில் சக்தி வடிவத்தில் ஓர் அங்கம் உள்ளது.

பெரியாவுடையாரே சிவசக்தி ரூபத்தில் உள்ளார் என்று கருதப்படுவதால்
அம்பாளுக்குத் தனிச்சந்நதி ஏதும் இல்லை. அதுமட்டுமின்றி, கோயிலில் எந்தப் பெண்
தெய்வ சந்நதிகளும் இல்லை என்பது வியப்பிற்குரியது. பழநி ஆண்டவனைப் போலவே
பெரியாவுடையாரும் மேற்கு நோக்கி இருக்கிறார். சத்யோஜாத மூர்த்தி என்று
அழைக்கப்படுகிறார். வேறு எங்குமில்லாத வகையில் பிரதோஷ நாயகர், தாண்டவ நிலையில்
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு நடராஜராக, கையில் டமருகத்துடன் காணப்படுவது,
பெரியாவுடையார் கோயிலின் மற்றொரு அதிசயம்.

பொதுவாக நடராஜர் சிவகாமியுடன் சேர்ந்துதான் காணப்படுவார். ஆனால், இங்கு
சிவகாமி இல்லை. நடராஜர், கருங்கல் சிலையாக உள்ளார். உடல் முழுவதும் கறுப்பு
வண்ணத்திலும், முகம் வெண்மையாகவும் காணப்படுகிறது. மஹாநந்தி பிரமாண்டமாக
அமைந்துள்ளார். மிக அழகான தக்ஷிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம். ஒரு கையில்
ஓலைச் சுவடியும், ஒரு கை சின்முத்திரையும் கொண்டு வீற்றிருக்கும் இவர் மேதா
தக்ஷிணாமூர்த்தி எனப்படுகிறார். கடப்ப மரம் இத்தலவிருட்சம். 1915ம் ஆண்டு
நடைபெற்ற சீரமைப்பின்போது, கோயில் சுவரிலுள்ள கல்வெட்டுச் செய்திகள் பலவும்
சிதிலமடைந்து விட்டன.

இறைவனிடம் பிரியாவிடை பெற்ற பெரிய நாயகி அம்மை, ஆடி 18ம் பெருக்கன்று
பெரியாவுடையார் கோயிலில் எழுந்தருளி மாங்கல்ய நோன்பு கொண்டாடி, பின் மாலை
மீண்டும் தன் இருப்பிடத்திற்கே சென்று விடுகிறார். அன்றைய தினம் பெண்கள்
ஷண்முக நதியில் நீராடி அம்மையப்பராகக் காட்சி தரும் பெரியாவுடையாரைத்
தரிசித்து வணங்கி, மாங்கல்யச் சரடு கட்டிக்கொண்டு நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.
பழநியை ஒட்டி அமைந்துள்ள அஷ்ட மங்கல க்ஷேத்ரங்களுள் ஒன்றான கோதைமங்கலம்
கோதீஸ்வரர் கோயில், பெரியாவுடையார் கோயிலுக்கு அருகாமையிலுள்ளது.

விஜயதசமியின் போது, பெரிய நாயகி அம்மை, கோயிலிலிருந்து முத்துக்குமார சுவாமி,
தந்தப் பல்லக்கில் இங்கு எழுந்தருளி வன்னிகாசுர வதம் செய்து மீண்டும் தன்
இருப்பிடத்திற்குச் செல்கிறார். பழநிக்குப் பக்தர்கள் எடுத்து வரும்
காவடிகளுள் ஒருவகை, சுற்றுக் காவடி என்பது. காவடியைச் சுமந்துகொண்டு உள்ளூர்க்
கோயில்களை வலம் வந்து பாதவிநாயகரை வணங்கி கிரிவலம் செல்வது சுற்றுக்காவடி
எனப்படும். சுற்றுக்காவடி கொண்டு செல்வோர் திருவாவினன்குடிக் குழந்தை
வேலாயுதன், பெரிய நாயகி அம்மை, பெரியவுடையார் ஆகியோரை கிரிவலம் வருகிறார்கள்.

‘‘ஞான தத்துவத்தின் முன்னர் தோன்றுவது புத்தி தத்துவம். எனவே, ஞானபண்டிதனான
பழநிப் பெருமானைத் தரிசிக்கும் முன்னர் புத்தி தத்துவ தலைவனான பாத விநாயகரைத்
தரிசித்தல் வேண்டும்,’’ என்பார் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளையவர்கள்.
மலைக்குப் படி ஏறத் துவங்குமிடத்தில் பாத விநாயகர் வீற்றிருக்கிறார். இது
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட கோயில் என்றும் அங்கிருந்த ஒரு
கிணற்றை மூடி அதன்மேல் சந்நதி அமைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

மூன்று விநாயகர் திருவுருவங்கள், நாகர் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர்
திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவடி கொண்டு வருபவர்களும், கிரிவலம்
செல்பவர்களும் இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபட்ட பின்னரே மலை
ஏறத் துவங்குகிறார்கள். கிரிவலப் பாதையில் நாம் என்னென்னவற்றை அனுபவிக்கிறோம்
என்பதைப் பார்ப்போம்.

*சித்ரா மூர்த்தி*


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 1]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

 [image: Miles Otoole]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to