தொழில் தொடங்கலாம் வாங்க! - 01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?
Published : 07 Feb 2017 (The Hindu, Tamil version)

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

“சொந்தமா நாமே ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம்.”

இதைச் சொல்லும் போது அந்த இளைஞனின் கண்களில் கனவு தெரிகிறது. “சொந்தமா...
சார்...”

“பெரிசா வரணும் சார். எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டாலும் கொடுக்கத் தயார்.
ஆனா ஜெயிக்கணும் சார்.”

இளைஞனின் குரல் காதல் வயப்பட்டது போலப் பரவசமாய் இருந்தது. கவுதம் மேனனின்
கதாநாயகன் மாதிரி அவனைப் புரட்டிப் போட்டிருக்கு, இந்தப் பிஸினஸ் ஐடியா.
“அப்பா கிட்ட அஞ்சு ரூபாவரை அரேஞ்ச் பண்ணக் கேட்டிருக்கேன். அவரும் நிலத்தை
ஒத்தி வெச்சு தரேன்னுருக்கார். பத்தலேன்னா பாங்குல கேட்கலாம். இரண்டு
வருஷத்துல போட்டதுக்கு மேலே நிச்சயமா மூணு மடங்கு வரும். ஏன்னா இந்தப் பிஸினஸ
ஆறு மாசமா ஸ்டடி பண்ணியிருக்கேன். கண் கூடா எவ்வளவு காசு வரும்னு தெரியும்.
அதோட உங்க ஆலோசனையும் வேணும்!”

*எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்!*

தொழிலை அவர் விளக்கினார். விளங்கியது. பிஸினஸ் பிளான் உண்டா என்றதற்கு
உதட்டைப் பிதுக்கினார். தன் உற்ற நண்பன் தான் பிஸினஸ் பார்ட்னர் என்றார். அவர்
என்ன செய்வார் என்றதற்கு ‘எங்கூட இருந்து எல்லாத்தையும் பாத்துப்பான்’ எனப்
பதில் வந்தது.

நெடுந்தூரம் பயணித்து ஆவலுடன் வந்த இளைஞரிடம் மிகச் சில ஆதாரக் கேள்விகளைக்
கேட்டேன். எதற்கும் சத்தான பதில் இல்லை. ஒரு சின்ன ஹோம் வொர்க் போல ஒன்றைக்
கொடுத்து “இதைச் செய்துவிட்டு ஒரு மாதம் கழித்து வாங்க. அது வரை அவசரப்பட்டு
பணம் போடாதீங்க” என்று சொல்லி அனுப்பினேன். சுருங்கிய பலூனாய் திரும்பிப்
போனார். (பிறகு என்ன ஆனது அந்த வியாபாரம் என்பதைப் பிறகு சொல்கிறேன்!)

தொழில் தொடங்கி வெற்றி பெறுதல் என்பது உயிர் பெறுதல் போலத்தான். ஆயிரக்கணக்கான
விந்துகள் முந்தியும் ஒன்றுதான் இலக்கை அடைகிறது. மற்றவை அழிந்து போகின்றன.
அந்த உயிர் நிலை கொண்டு சீரான சூழலில் வளர்ந்து உலகின் ஒளியைக் காண நேரம்
பிடிக்கிறது. அதற்குப் பின்தான் புற வாழ்க்கை தொடங்குகிறது.

இந்த அத்தனை விதிகளும் தொழில் தொடங்குவதற்கும் பொருந்தும். ஆயிரம் பேர் தொழில்
தொடங்கினாலும் வெற்றி ஒருவருக்குத் தான். அதுதான் நிதர்சனம். ஆனால், அந்த
ஒன்று நாமாக இருப்போமே என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் முதலீடு செய்கின்றனர்.

*நாமளே ‘கிங்’ ஆகிடலாம்*

சினிமா எடுப்பவர்கள் யாராவது படம் ஓடாது என்று நினைத்தா பூஜை போடுகிறார்கள்?
எந்தப் படம் ஓடும் எது ஓடாது என்ற தங்க விதி தெரிந்தால் மற்றவர்கள் ஏன் காசைக்
கரியாக்கப் போகிறார்கள்? உண்மை என்னவென்றால் அப்படி ஒரு தங்க விதி இல்லை!

ஆனாலும் தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.
காரணங்கள்தான் வேறுபடும். “ஒருத்தருக்கு கீழே வேலை செய்யப்படாது”, “நம்ம
தகுதிக்கு வேலைக்குப் போகலாமா?”, “பெருசா பணம் சேக்கணும்னா பிஸினஸ்தான்”,
“யாருக்கோ பண்ற உழைப்பை நமக்கே போட்டா நாமளே கிங் ஆயிடலாம்”, “நமக்குத்
தெரிஞ்ச தொழில். கண்டிப்பா தப்பு பண்ணாது” இப்படி ஆயிரம் சொல்லலாம்.

*சொந்தத் தொழில் ஆபத்தா?*

தொழிலில் ஜெயித்தவர்களுக்கு மட்டுமே ஊடக வெளிச்சம் உண்டு. “ரெட் பஸ் ஆரம்பிச்ச
பசங்க அஞ்சு வருஷத்துல ஆயிரக்கணக்கான கோடி டர்ன் ஓவர் பண்ணாங்க!”,
“அம்பானிகூடப் பெட்ரோல் பங்குல வேலை பாத்துதான் பெரிய ஆளானார்!”.

எங்கோ ஆழ்மனதில் இந்தச் செய்திகள் எல்லாம் நல்ல வியாபார எண்ணமும் கடின
உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்; அவை வெற்றியைத் தந்துவிடும் என்ற தவறான
படிப்பினையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் தொழில் தொடங்கித் தோற்றவர்கள்தான்
அதிகம். ஏன் தோற்றோம் என்று அறிய முடியாதவரை வெற்றிக்குப் போடும் மூலதனங்கள்
வீணே!

உங்களுடைய சுற்றத்திலேயே பாருங்கள். தொழில் செய்து முன்னேறியவர்கள் எத்தனை
பேர்? தொழில் செய்து இழந்தவர்கள் எத்தனை பேர்? குறிப்பாக முதல்
தலைமுறையினருக்குத் தொழில் செய்தல் பெரும் சவாலே. இதில் துரதிர்ஷ்டம்
என்னவென்றால் சிறு தொழில் முனைவோர் இழக்கும் செல்வம் அவர்கள் குடும்பம்
சம்பாதித்தவை. அல்லது வாங்கிய கடனுக்கு வாழ்வெல்லாம் வட்டி கட்டுவர். அவர்கள்
என்ன விஜய் மல்லையாவா என்ன, கடன் வாங்கிக் கட்டாமல் வாழ!

சொந்தத் தொழில் அவ்வளவு ஆபத்தா? இந்தியாவில் சாலையில் வண்டி ஓட்டுவதே பெரிய
ரிஸ்க் தான். இந்தியர்களை அதிகம் கொல்வது மாரடைப்பைவிடச் சாலை மரணங்கள்தான்.
அதற்காக வண்டியில் போகாமல் / ஓட்டாமல் இருக்கிறோமா என்ன? நன்கு ஓட்டத்
தெரிந்து கொண்டு சாலைக்கு வருவதுதான் பாதுகாப்பு. அதேபோலத்தான் தொழில்
முயற்சியும். கற்றுத் தேர்ந்து வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வணிக
நிர்வாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

*வழிகாட்டுதல் இங்கே*

இன்று incubation center என்று ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம். நிறுவனங்களில் தொழில்
முனைவோரை முதல் ஆறு மாதம் அடை காத்துத் தொழில் ஓட்டத்தைச் சீராக்கி வெளியே
அனுப்புகின்றனர். ஆனால் இவை படித்தவர்களுக்கும், நகரவாசிகளுக்கும், ஆங்கிலம்
தெரிந்தவர்களுக்கும்தான் பயன்படுகின்றன.

ஆனால், நம் கிராமங்களில், சின்ன டவுன்களில், பெரு நகரங்களில் பல இளைஞர்கள்
தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எண்ணம், உழைப்பு, கடன் வாங்கும் தகுதி
எல்லாம் உள்ளன. ஆனால், வழிகாட்டுதல் இல்லை. பாடத்திட்டத்தில் இது இல்லை.
வாழ்க்கையில் பட்டுத்தெளிந்து மீண்டும் முயற்சிக்கும் வசதிகள் பலருக்கு இல்லை.

எளிய தமிழில் தொழில் முனைவின் சகலக் கூறுகளையும், வியாபார உதாரணங்களுடன்,
நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகளை இவர்களுக்கு வழங்கினால் எப்படி இருக்கும்.
அதைத்தான் செய்யப் போகிறோம்.

யாருக்கு வியாபாரம் ஒத்து வரும், என்ன பிஸினஸ் மாடல், யார் பார்ட்னர்,
எப்படிப் பதிவு செய்வது, எப்படிக் கடன் வாங்குவது, எப்படிச்
சந்தைப்படுத்துவது, எப்படி முதலீட்டாளர்களைப் பெறுவது, பணத்தை-பணியாளர்களை
கையாள்வது எப்படி, போட்டியைச் சமாளிப்பது எப்படி, தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்துவது எப்படி, வியாபாரத்தை மாற்றுவது எப்படி எனப் பல ‘எப்படி’களைப்
பார்க்கப் போகிறோம்! இந்தக் கேள்விகள் எல்லா வளர்ந்த நிறுவனங்களுக்கும் உண்டு.

நீங்கள் பண முதலீடு செய்வதற்கு முன் இதைப் படிப்பது தற்காப்பு மட்டுமல்ல
இதுவும் ஒரு முதலீடுதான்!

கலக்கலாம் பாஸ்! வாங்க தொழில் தொடங்கலாம்!

* தொடர்புக்கு: [email protected] <[email protected]> *

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                 [image: Right ☯ no buy ever !!!]   *V A N A K K A M     S
U B B U *
[image: -0op9gs2ch4BrCwfLEifUF_m2bnghTvSIZrwtAG8KkFYfqlQQmu3bg==.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to