தொழில் தொடங்கலாம் வாங்க! - 04: ஏதாவது செய்ய முடியுமா? Published in The Hindu, Tamil: 28 Feb 2017 டாக்டர். ஆர். கார்த்திகேயன்
தொழில் தொடங்கும் புள்ளி என்று எதைச் சொல்லலாம்? தொழில் எண்ணம் கொண்டவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் கண்ணில் தென்படும். ‘இதைச் செய்தால் காசு வரும்’ என்று தோன்றக்கூடிய பத்து ஐடியாக்களையாவது நீங்கள் தாண்டி வந்திருப்பீர்கள். தொழில் முனைவோரின் ஆதாரத் தகுதி சந்தை வாய்ப்புகளைக் கண்டு கொள்வதுதான். *ஆரம்பிக்கலாம், பண்ணலாம், தரலாம்!* பிறர் கண்களுக்குத் தெரியாத தொழில் வாய்ப்புகளை நீங்கள் உணர்வீர்கள். மனம் ஒட்டுமொத்த வியாபாரச் சுழற்சியையும் ஒரு முறை நடத்தி ஒத்திகை பார்க்கும். பிறரிடம் சொல்லி சிலாகித்துக்கொள்வீர்கள். “சுத்து வட்டாரத்துல ஓட்டலே கிடையாது. இவ்வளவு கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் இருக்கு. ஒரு டிஃபன் சென்டர் போடலாம்!” “நாங்க குடியிருக்குற ஃப்ளாட்ல மட்டும் 250 குடும்பங்கள் இருக்கு. நிறைய வயசானவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு தேவையான எல்லா வெளி வேலைகளையும் பாக்க ஒரு சர்வீஸ் ஏஜென்சீஸ் ஆரம்பிக்கலாம்!” “ஃபைனல் இயர் படிக்கிற பசங்களுக்கு இண்டெர்ன்ஷிப் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ஆப் (App) செஞ்சு காலேஜ் பசங்களையும் இண்டஸ்ட்ரி ஹெச். ஆர். எல்லாம் கனெக்ட் பண்ணலாம்!” “எல்லாருக்கும் இயற்கை உணவு மேலதான் இப்ப கவனம் வந்திருக்கு. ஆனா போய் வாங்கத்தான் சிரமப்படறாங்க. அதனால் ஹோம் டெலிவரி செய்யலாம். ஆர்டரின் பேரில் வாங்கித் தரலாம்!” இதில் எதுவும் பூமியைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனை இல்லை. இந்தத் தேவைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை ஒரு வியாபாரமாக உருவாக்குவதுதான் தொழில் முனைவோரின் திறமை. *விரக்தி உருவாக்கியத் துறை* கண்ணில் படும் தேவையை வைத்துப் பிஸினஸ் மாடல் பிடிக்கலாம். ரெட் பஸ் போல. தீபாவளிக்கு முன் இரவு நாலைந்து மணி நேரங்கள் அலைந்தும் பஸ் கிடைக்காமல் விரக்தியோடு திரும்பியவர் மனதில் உதித்தது இதுதான். பல பிரயாணிகளுக்கு எந்தப் பஸ்ஸில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் பண்டிகை நாளில்கூடச் சில பஸ்கள் முழுக்க நிரப்பப்படாமல் புறப்படுகின்றன. காரணம் இந்தத் தகவல் இரண்டு பக்கமும் இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ஒரு தகவல் தொடர்பு சேவை இருந்தால்? இந்த எண்ணம் ஒரு கம்பெனியை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு துறையையே உருவாக்கியுள்ளது. *நடந்தபடியே பாட்டுக் கேட்போமா?* எல்லாத் தேவைகளும் கண்ணில் படுமா? வாடிக்கையாளர்களுக்கே தெரியாத தேவைகள் நிறைய உள்ளன. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால் ஆர்வமாக வாங்கிக் கொள்வார்கள். உதாரணம் வாக் மேன். மியூசிக் சிஸ்டம் என்றால் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்பது என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறை. சாலையில் நடந்து போகும்போது இசை கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? சோனி நிறுவனர் அகியோ மொரீடோவுக்கு இப்படி ஒரு எண்ணம். ஆனால் இப்படி ஒரு தேவை இருப்பதாக எந்த சந்தை ஆய்வும் சொல்லவில்லை. யாரும் கடை தேடி வந்து கேட்கவும் இல்லை. ஒரு அனுமானம்தான் இருந்தது முதலாளிக்கு. போர்ட் உறுப்பினர்களிடம் சொன்ன போது யாரும் இதைப் பெரிதாக வரவேற்கவில்லை. மனம் தளராத மொரீடா இதைத் தன் ஆர் & டி பணியாக எடுத்துச் செய்ய ஆரம்பித்தார். ஒரு நாள் அதைச் சிறிய அளவில் வெளியிட்டார். வாக் மேன் என்று பெயரிட்டார். “என்ன பெயர் இது? நடக்கவும் உதவவில்லை. ஆண்களுக்கானதுமில்லை. ப்ராடெக்டும் புதுசு” என்று எல்லோரும் புருவம் உயர்த்தப் பெயரை மட்டுமாவது மாற்றலாமா என்று யோசித்தார். ஆனால் அதற்குள் இது பரபரப்பாக விற்பனை ஆனது, வாடிக்கையாளர்களிடம் பதிந்துவிட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார் அகியோ மொரீடா. வாக் மேன் ஒரு தலைமுறையையே தன் கட்டுக்குள் வைத்திருந்தது. யாருக்கும் தெரியாத தொழில் தேவையை எப்படிக் கண்டு பிடித்தார்? அதனால்தான் அவர் தொழில் மேதை. சோனி நிறுவனம் நுழையாத துறை இல்லை எனும் அளவுக்கு வளர, இந்தக் குணம்தான் காரணமாக இருந்தது. *முதலீட்டுக்கும் முன்னால்* உங்களைச் சுற்றி, உங்களுக்குத் தெரிந்து, உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பக்கூடிய தொழில் தேவைகளைப் பட்டியல் இடுங்கள். கண்ணில் படும் எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் சரியானதைத் தேர்வுசெய்வதில்தான் பாதி வெற்றி உள்ளது. என்னிடம் தொழில் ஆலோசனை கேட்டு வரும் பலர் இந்த முதல் படியையே தாண்டுவதில்லை. “ஏதாவது தொழில் செய்யணும் சார். கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செஞ்சா நல்லா பெரிய லெவலுக்கு வரலாம்னு சொல்லுங்க!” என்று யாராவது கேட்டால் அவர்கள் பிஸினஸுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றுதான் பொருள். நூறு தொழில் யோசித்து, பத்துத் தொழில் ஆராய்ந்து, ஓரிரு தொழிலுக்கு மாதிரி தயாரித்து, ஆலோசனை கேட்டுவிட்டுப் பணம் முதலீடு செய்வது நல்லது. பணத்தைப் போட்டு ஆரம்பித்த பின் யோசித்தால் அதைக் காப்பாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிவரும். மறைந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் ஒரு கருத்தைச் சொன்னார், “ பேப்பரில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி எழுதிக் கிழித்துப் போடலாம்; ஆனால் ஃபிலிமில் எடுத்து வெட்டி வெட்டி எறியக் கூடாது!” ஒரு இயக்குநர் என்பதை விடப் படத்தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு எனக்கு. பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கும் திரைப்படத் துறையிலேயே பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லாபகரமாகப் படங்கள் எடுத்தவர் அவர். அவர் சொன்னது சினிமாவிற்கு மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்! <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* * V A N A K K A M S U B B U * [image: -0op9gs2ch4BrCwfLEifUF_m2bnghTvSIZrwtAG8KkFYfqlQQmu3bg==.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
