தொழில் தொடங்கலாம் வாங்க! - 09: இதில் எந்த துரோகமுமில்லை! Published : 04 Apr 2017 [image: Inline image 1] டாக்டர். ஆர். கார்த்திகேயன்
நீங்கள் என்ன தொழில் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டீர்கள். அதற்குத் தேவையான ஆராய்ச்சி எல்லாம் செய்துவிட்டீர்கள். சந்தை நிலவரம், தொழில் வாய்ப்பு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். பணம் கிடைத்தவுடன் தொழில் ஆரம்பிக்கலாம். பெயர், இடம், நல்ல நேரம் என யோசிக்கிறீர்கள். அப்புறம் என்ன, “ஸ்டார்ட் மியூசிக்” என்று ஆரம்பிக்க வேண்டியது தானே? *300 சதவீதம் லாபமா?* கொஞ்சம் பொறுங்கள்! உங்கள் ஆராய்ச்சி எப்படி நடந்தது என்று முதலில் கூறுங்கள்! “கூகுள் பண்ணினேன், பத்திரிகைகளில் இது பற்றி படித்தேன், தெரிந்த சில பேரிடம் பேசினேன், அப்புறம் என்ன..” என்கிறீர்களா? இது போதாது. உங்கள் தொழில் பற்றிய சமீபத்திய வெள்ளை அறிக்கைகள் ஏதேனும் உண்டா? உங்களுக்குக் கிடைத்த எண்கள் நம்பத்தகுந்தவையா? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. என் நண்பர் ஒருவர் சொன்னார்: “ஓட்டல் பிசினஸில் 300 சதவீதம் லாபம்னு எல்லாரும் சொன்னாங்க. கையில் உள்ளதைப் போட்டுப் பெரிசா ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் கொடுத்த தரத்தை நாளடைவில் கொடுக்க முடியலை. ஆட்கள் கிடைப்பது இவ்வளவு கஷ்டம்னு ஆரம்பத்துல தெரியலை. தொடர்ந்து வந்த போட்டிகள்ல விற்பனை நிறைய குறைஞ்சு போச்சு. இப்ப மெஸ்ஸா மாத்தலாமான்னு யோசிக்கிறேன். இவ்வளவு இண்டீரியர்ஸ் பண்ணி வச்சிருக்கேன். எப்படிப் பிசினஸையே மாத்தறதுன்னு தெரியலை. இப்படி ஆகும்னு நினைக்கல!” *ஆராய்ந்ததும் ஆரம்பித்ததும்* எங்கு தவறு நடந்தது? அவர் `எஃப் அண்ட் பி’ மேகசின்ஸ் (உணவு வணிகம்) நிறைய படித்திருக்கிறார். பல நாட்டு ரெஸ்டாரெண்ட் அதிபர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கையில் பணம் இருந்ததால் யாரிடமும் கடன் கேட்கவில்லை. இந்தத் தொழிலில் இருந்த ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் எல்லாப் பணத்தையும் இதில் முடக்கியிருக்கிறார். ஆனால், இவர் ஆராய்ந்த ஓட்டல்களும் இவர் ஆரம்பித்த ஓட்டலும் வேறு வேறு பிசினஸ் மாடல்கள் கொண்டவை. ஒரு வங்கியிடம் போய்க் கடன் கேட்டிருந்தால்கூட ஆயிரம் கேள்விகளில் ஒன்றிலாவது இவர் அதை உணர்ந்திருப்பார். சொந்தக் காசு. கேள்வி கேட்கப் பார்ட்னரும் இல்லை. மிகப் பிரமாதமாய் ஆரம்பித்துத் தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார். “300% லாபம் வரும் என்ற சொன்னவர்களைத் தேடிப் போய் உதைக்கப் போகிறேன்” என்றார் விரக்தியுடன். *போட்டியாளரிடம் வேலை பாருங்கள்* இதற்குத்தான் நான் ஒரு ஆலோசனை சொல்வேன். உங்கள் போட்டியாளர்களை நன்றாக ஆராயுங்கள். முடிந்தால் அங்கு வேலைக்குச் சேருங்கள். ஒரு வருடமாவது வேலை பாருங்கள். தொழிலில் யாரும் சொல்லாத நெளிவு சுளிவுகள் புரியும். பிறரிடம் தொழில் கற்கச் சம்பளம் வேறு கிடைக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சம்பளத்துக்கு மேல் வேலை செய்யுங்கள். இதில் எந்தத் துரோகமுமில்லை. நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மிடம் தொழில் கற்றுப் பிரிந்து போவது எல்லாத் தொழில்களிலும் நடப்பவைதானே? ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாய் நேர்மையாய் இருப்பது அவசியம். நீங்கள் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் உங்களுக்கு நிகரானவராக இருக்கணும். அளவில் ஓரளவு சமமாக இருக்கணும். மிகப்பெரிய போட்டியாளரிடம் சென்றால் அவர் பிரச்சினைகள் வேறாக இருக்கும். மிகக் குறைந்த இடத்திலும் உங்களுக்கான கற்றல் இருக்காது. *கேட்டு வாங்குங்கள்* உங்களுக்குப் போட்டியாளரிடம் வேலை செய்வதில் சிரமம் உள்ளதென்றால், அவசியம் ஒரு மார்க்கெட் ரிசர்ச் (சந்தை ஆராய்ச்சி) செய்யுங்கள். இதற்கு நீங்கள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சென்று தொழில் மூலதனத்தில் பாதியை ஃபீஸாகக் கொடுக்க வேண்டும் என்று பொருளில்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து அந்தப் பொறுப்பை ஒப்படையுங்கள். சில நிர்வாகப் பள்ளிகள் இதை இலவசமாகக்கூடச் செய்து தரலாம். ஆனால், உங்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் பட்டியல் இடுங்கள். அவை அனைத்தையும் கேட்டு வாங்குங்கள். இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் என்ன? தொழில் சார்ந்த சட்டங்கள், வரிகள் என்ன? தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உள்ளனவா? போட்டியாளர்கள் யார்? பணியாளர் செலவு எவ்வளவு இருக்கும்? லாப விகிதம் எப்படி இருக்கும்? தொழிலில் ஆபத்துகள் என்ன? இதற்குக் கடன் அளிப்பவர்கள் யார்? அரசு உதவி உண்டா? மூலதனமாகத் தேவதை முதலீட்டாளர்கள் (ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்) வரச் சாத்தியம் உள்ளதா? அரசின் கொள்கை மாறுதல்களால் பாதிப்புகள் வருமா? இப்படி நிறைய கேள்விகளை முதலிலேயே கேட்பது நல்லது. *ஆழம் தெரியாமல்…* சந்தை ஆராய்ச்சி என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. எல்லாத் தொழில் முனைவுகளுக்கும் இது அவசியம். ஒரு தொழில் முனைவரால் எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவத்துடன் இருக்க முடியாது. அதனால் உங்கள் தொழில் பற்றிய எல்லா விதக் கேள்விகளையும் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு நம்பத்தகுந்த ஆய்வு செய்து பதில்களை அறிவது நல்லது. பலர் இதை ஒரு செலவாக நினைத்து ஓரம் கட்டிவிடுகிறார்கள். பெரிய தொழில் முதலீட்டில் இது ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். ஒரு காப்பீடு போல நினைத்து இதைச் செய்ய வேண்டும். மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு ஹெல்த் செக் அப் நல்லதில்லையா? ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பது எப்பேர்ப்பட்ட அனுபவ மொழி. என்ன நீச்சல் தெரிந்தாலும் ஆழம் அறிதல் அவசியம். தொழில் முனைவு என்பது காலை விடுதல் மட்டுமல்ல, உள்ளே குதித்தல். ஆழ அகலம் தெரிவது நல்லது. நீங்கள் ஆரம்பிக்க நினைக்கும் தொழிலைப் பற்றி அறிய முயற்சி எடுங்கள். அதற்குச் செலவாகும் பணம், நேரம், உழைப்பு அனைத்தும் மூலதனம்! <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* * V A N A K K A M S U B B U * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
