கடவுளின் நாக்கு 9: தேவையில்லாத கோபம்!
எஸ்.ராமகிருஷ்ணன்

உறவுகளைச் சீர்படுத்திக்கொள்வதற்குக் கதைகள் பெருமளவு உதவிபுரிகின்றன.
குறிப்பாகத் திருமண உறவு குறித்து நிறையக் கதைகள் உலகெங்கும் காணப்படுகின்றன.
மணமகன் அல்லது மணமகள் குடும்பம் சார்ந்த பெருமைகள், ஏழை - பணக்காரன்
வேறுபாடுகள், பழக்க வழக்கங்களின் வேறுபாடுகள் குறித்து வாய்மொழிக் கதைகள்
அதிகம் பேசுகின்றன. கேலி செய்வதைப்போல உண்மையைச் சுட்டிக் காட்டுவதே இந்தக்
கதைகளின் நோக்கம்.

குறிப்பாக முட்டாள் மருமகனைப் பற்றிய கதைகள், எல்லா நாடுகளிலும்
காணப்படுகின்றன. இந்தக் கதைகளின் ஒப்புமைகளை ஆராய்ந்த ஆய்வாளர் லீலா பிரசாத்,
இந்தக் கதைகளை உருவாக்கியவர்கள் பெண்களே என்கிறார். கூடவே தனது கள ஆய்வில்
சேகரித்த காஷ்மீரக் கதை ஒன்றினையும் விவரிக்கிறார்.

புதிதாகத் திருமணமானவன் விருந்துக்காக மாமியார் வீட்டுக்குக் கிளம்பும் போது
அவனது அம்மா அறிவுரைகள் சொல்வதில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது.

‘‘மாமியார் வீட்டில் உன்னை மதிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டுக்கு
போனதும் இருப்பதிலே உயரமான இருக்கையில் போய் உட்கார்ந்து கொள். யாராவது ஏதாவது
பேச்சுக் கொடுத்தால் லேசில் வாயைத் திறக்காதே. பேச வேண்டியது வந்தால் கனமான
விஷயங்களை மட்டும் பேசு. இல்லாவிட்டால் உன்னை முட்டாள் என நினைத்து விடு
வார்கள்’’ என அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறாள் அம்மா.

மாமியார் வீட்டுக்குப் போன புதுமாப்பிள்ளை, அங்கே எல்லா நாற்காலிகளும்
ஒன்றுபோலவே இருந்ததைக் கண்டு குழப்பமடைகிறான். வீட்டில் இருப்பதிலேயே உயரமாக
இருந்தது இரும்பு பீரோ. ஆகவே, ஒரு நாற் காலியைப் போட்டு பீரோ மீது ஏறி
உட்கார்ந்துகொள்கிறான்.

புது மாப்பிள்ளையின் செயல்பாடுகளைக் கவனித்த மாமியார், ‘இது என்ன கூத்து?’
எனப் புரியாமல், ‘‘விசிறிக் கொள்ள விசிறி வேணுமா மாப்பிள்ளை’’ என்று
கேட்கிறார். ‘யாரிடமும் அவ்வளவு லேசில் பேசிவிடக் கூடாது’ என்ற தனது அம்மாவின்
கட்டளையால் அவன் வாயைத் திறக்கவே இல்லை.

இதற்குள் வீடு தேடிவந்த உறவினர்கள் எல்லாம், ‘புது மாப்பிள்ளை எங்கே எனத்
தேடினார்கள்’ அவனோ ஒரு பீரோ மீது ஏறிக் கம்பீரமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு
தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

‘மருமகனை எப்படிச் சமாளிப்பது?’ என்று மாமியாருக்குத் தெரியவில்லை. எதையாவது,
எப்படியாவது பேசி, மாப்பிள்ளையைக் கிழே இறங்கச் செய்துவிட வேண்டும் என
முடிவுசெய்து, ‘‘சாப்பிட என்ன வேண்டும் மாப்பிள்ளை’’ என்று கேட்டார்.
‘தவிர்க்க முடியாமல் பேச வேண்டிய தருணம் வந்தால், கனமான விஷயங்களை மட்டுமே பேச
வேண்டும்’ என்று அம்மா அறிவுரை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்ததால், உடனே
அவன் சத்தமாக ‘‘திருகை வேண்டும்’’ என்றான்.

‘திருகையை எப்படிச் சாப்பிட முடியும்?’ என மாமியாருக்குப் புரியவில்லை. ‘‘வேறு
ஏதாவது வேண்டுமா?’’ என்று மாமியார் கேட்க, அதற்கு மருமகன் ‘‘ஆட்டு உரல்’’
என்று சத்தமாகப் பதில் சொன்னான்.

‘‘அய்யோ என் மகளை இப்படி ஒரு முட்டாளுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டேனே…’’
என்று மாமியார் ஒப்பாரி வைக்கத் தொடங்கினார். புது மாப்பிள்ளையைப் பேய்
பிடித்துவிட்டதாக உறவினர்களும் பயந்து ஓடினார்கள். ‘அம்மா சொன்னதைப் போலத்தானே
நாம் நடந்து கொண்டோம். ஏன் இத்தனை குழப்பங்கள்?’ எனப் புது மாப்பிள்ளைக்குப்
புரியவே இல்லை என்பதுடன் அந்தக் கதை நிறைவு பெறுகிறது.

தமிழ்நாட்டிலும் இது போன்ற கதைகள் நிறைய இருக்கின்றன. புதுமாப்பிள்ளை என்றால்
இப்படித் தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரை இன்றைக்கும்
சொல்லப்படுகிறது. மாமனார் வீட்டை முடிந்த அளவு உறிஞ்சிவிட வேண்டும் என
நினைக்கும் மாப்பிள்ளைகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறுக்கிக்
கொண்டு எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்களை எப்படிச் சமாளிப்பது எனத்
தெரியாமல் பெண்வீட்டார் கவலையும் சங்கடமும் கொண்டு தவிக்கிறார்கள்

எனது நண்பர் ஒருவர் தன் மகளைக் கட்டிக் கொடுத்து பெங்களூரு அனுப்பி வைத்தார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மகள் அப்பாவைக் காண்பதற்காகச் சென்னை வருவதை
வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை வீட்டுக்கு வந்த மருமகன் சாப்பிடும்போது
பெரிய ஆம்லேட் வேண்டும் எனக் கேட்டான்.

‘‘நாலு முட்டையை ஆம்லேட் போட்டு எடுத்து வாம்மா’’ என மாமியார் கேலி
செய்துவிடவே, மருமகனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம்.

‘‘உங்க அம்மா எப்படி என்னைக் கேலி செய்யலாம்?’’ என மனைவியிடம் கோபமாகச்
சண்டையிட்டதோடு, இனி உன் வீட்டுக்கு வரவே மாட்டேன், உன் வீட்டில் இருந்து
யாரும் பெங்களூரு வந்து போகக் கூடாது என்று கோபித்துக் கொண்டு போய்விட்டான்.

எவ்வளவோ முயன்றும் நண்பரால் மருமகனைச் சமாதானப் படுத்தவே முடியவில்லை. ஆனால்,
தன் மகளைப் பார்க்காமல் இருக்க முடியாத நண்பர், மாதம் ஒருமுறை பெங்களூருவுக்கு
ரயிலில் போய் இறங்கி, ஆட்டோ பிடித்து மகள் வீட்டின் அருகில் உள்ள
பூங்காவுக்குப் போய் காத்துக் கொண்டிருப்பார்.

மருமகன் அலுவலகம் போன பின்பு, மகள் பூங்காவுக்கு வருவாள். மதியம் வரை அவர்கள்
பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவுக்குப் பிடித்த உணவை மகள் சமைத்து எடுத்துக்
கொண்டு வந்திருப்பாள். இருவரும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். மாலையானதும் அவர்
சென்னைக்குக் கிளம்பிவிடுவார். இப்படி இரண்டு வருஷங்கள் ஓடின.

ஒருநாள் இந்த இரகசியச் சந்திப்பைக் கண்டுபிடித்துவிட்ட மருமகன், மாமனாரைத்
திட்டிச் சண்டை போடவே பிரச்சினை பெரியதாகி உறவு முற்றாக முறிந்து விட்டது.

இதே கேலியைத் தனது அம்மா செய்திருந்தால் நிச்சயம் அந்தப் பையன் கோபித்துக்
கொண்டிருக்க மாட்டான். ஆனால், மாமியார் செய்ததால் ஏன் இவ்வளவு ஆத்திரம்?
‘மாமியார் வீட்டில் விட்டுக் கொடுத்துப் போய்விடக் கூடாது’ எனக் காலம் காலமாக
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருவர் மனதிலும் அது ஆழமாக
வேரூன்றி யிருக்கிறது. அந்த இறுக்கத்தைத் தளர்த்தவே இதுபோல கதைகள்
சொல்லப்படுகின்றன.

மருமகன் அல்லது மருமகளிடம் குற்றம் குறை கண்டுபிடிக்காத மாமியாரோ, கோபித்துக்
கொள்ளாத மருமகனோ அல்லது மருமகளோ கிடையாது என்பதன் சாட்சியம்தான் இது போன்ற
கதைகள்.

கதையில் வரும் முட்டாள் மருமகனின் செயலை நாம் ரசித்து சிரிக்கிறோம். ஆனால்,
நிஜவாழ்வில் அதை அவமானமாகக் கருதுகிறோம். கோபித்துக் கொள்கிறோம். வாழ்வில் எதை
எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என் பதைக் கற்றுக் கொடுக்கவே கதைகள்
உதவுகின்றன.

முட்டாள் தினமாக ‘ஏப்ரல்- 1’ அறிவிக்கப்பட்டதற்குப் பின்னணியில்கூட இது போல
சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல்-1ஆம் நாளைத்தான் புத்தாண்டு
தினமாகக் கொண்டாடி வந் துள்ளனர். 1562-ஆம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான
கிரிகொரி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறைப்படி ஜனவரி- 1 அன்றுதான்
புத்தாண்டு ஆரம்பமாகிறது என அறிவித்தார்,

இந்த மாற்றத்தை ஐரோப்பிய தேச மக்கள் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களின்
பழைய வழக்கப்படி ஏப்ரல் முதல் தேதியன்றே புத்தாண்டைக் கொண்டாடினார்கள்.
அவர்களை, சீர்திருத்தவாதிகள் கேலிசெய்து முட்டாள் என அழைத்தார்கள். அதில்
இருந்தே ஏப்ரல்-1 ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கருதப்படுகிறதாம்.

*- கதை பேசும்…*

*இணையவாசல் : >தொன்மம் மற்றும் சாகசக் கதைகளை வாசிக்க விரும்புவோருக்கானது
<https://ztevetevans.wordpress.com/>*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to