ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 178 / 28-01-2026
சீதையை தேடுதல்... ★சுக்ரீவன், இப்படி எல்லா இடங்களிலும் சீதையை தேடி ஒரு மாதத்திற்குள் இங்கு வந்தடைய வேண்டும். ஆதலால் எல்லோரும் காலத்தை தாமதிக்காமல் உடனே புறப்படுங்கள் என்றான். பிறகு ராமன் அனுமனை தனியாக அழைத்துச் சென்று, வீரத்தில் சிறந்தவனே! நிச்சயம் நீ சீதையை கண்டுபிடித்து வருவாய் என நம்புகிறேன். சீதையை பற்றி நான் உன்னிடம் கூறுகிறேன். சீதை அழகில் சிறந்தவள். தாமரைப்பூ போன்றவள். மிகவும் நளினம் உடையவள் என சீதையைப் பற்றிக் கூறினார். பிறகு இராமர், சீதையிடம் இக்கணையாழியை என் அடையாளமாக காண்பித்து என்னுடைய நலத்தை கூறுவாயாக என வாழ்த்தி அனுமனுக்கு விடை கொடுத்தார். ★ராமர் சுக்ரீவனிடம் பேசுவதற்கு ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசையிலும் இருக்கும் எல்லா நாடுகளையும் மற்றும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கிச் சொன்ன அழகைப் பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் அனைத்து வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக் கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன். ★இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற ஒரு காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் நான் ஒளிந்து இருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு சீதையைத் தேட கொடுத்த கால அவகாசமான ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது. ★ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார். ★ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்திய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள். எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை அங்கு கண்டார்கள். அவர்கள் அந்த பாலைவனத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இருந்தாலும் அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும், ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள். ★ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஓங்கி ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் அவர்களுக்கு அங்கு தென்படவில்லை. ★பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் மிகவும் சோர்வடைந்தனர். நாளை...................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtapqLgPM-gOpmf9TZwR%2Bg37pDPNNMkuYWh9HzZ%3DmT1Ew%40mail.gmail.com.
