ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 188 /07-02-2026 இலங்கைக்கு செல்ல தாவினார் அனுமன்...
★அனுமன் மிக அமைதியாக அனைவருக்கும் நடுவில் வந்து நின்றார்.ஜாம்பவான் அனுமனை பார்த்து, மாருதி என்ற பெயர் கொண்ட அனுமனே! பல சாஸ்திரங்கள் கற்றவனே, மிக்க வலிமையுடையவனே, கடமை தவறாத மாவீரனே, பணிவு மிக்கவனே, செயலை ஆராய்ந்து செய்யும் ஆற்றல் உடையவனே, நீதி நெறியில் நிலைத்து இருப்பவனே, என்றும் வாய்மை தவறாதவனே, பெண்ணாசை என்பது இல்லாத பிரம்மச்சாரியே, தன்னை எதிர்ப்பவரை வீழ்த்தும் ஆற்றல் உடையவனே, தக்க சமயத்தில் உருவத்தை மாற்றும் ஆற்றல் உடையவனே, ராமர் மீது மிக்க அன்பு உடையவனே, ★கடலை தாண்டி மாதா சீதையை கண்டுபிடிக்கும் பெரிய ஆற்றல் உன்னிடத்தில் மட்டும் உண்டு. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த வீரனே! தனியாக ஏன் பேசாமல் அமர்ந்து இருக்கின்றாய்?. பேச்சிலும் பலத்திலும் நம் அனைவரையும் விட முதன்மையானவனாக இருக்கும் நீ சுக்ரீவனுக்கு சமமானவன். கருடன், கடலை தாண்டி பறப்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். அந்த கருடனுடைய சிறகுகளின் பெரும் பலம் உனது மாபெரும் தோள்களுக்கும் உண்டு. பராக்கிரமத்திலும் வேகத்திலும் கருடனுக்கு நிகரானவன் நீ. ★உனது தாயார் அஞ்சனை தேவலோகத்து தேவதை ஆவாள். ரிஷி ஒருவரிடம் பெற்ற சாபம் காரணமாக வானரமாக புவியில் பிறந்தாள். அவளுக்கும் பகவான் வாயுதேவனுக்கும் மானச புத்திரனாக பிறந்தவன் நீ. வாயு தேவனுக்கு சமமான வீரியமும் பலமும் உன்னிடம் இருக்கிறது. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே சூரியனை பார்த்து அது ஒரு பழம் என்று எண்ணி அதை பிடிப்பதற்காக ஆகாயத்திற்கு தாவிச் சென்றாய். நீ பயமின்றி வானத்திற்கு தாவுவதைப் பார்த்த தேவராஜன் இந்திரன் மிகவும் கவலை கொண்டு யார் இவன் இப்படி தாவுகிறான் என்று தன்னுடைய வஜ்ராயுதத்தை உன் மீது வீசினான். ★வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட நீ ஒரு மலை மீது விழுந்தாய். பலத்த அடிபட்ட உன்னை கண்ட உனது தந்தை வாயு பகவான் கோபப்பட்டு தனது தொழிலான காற்றை வெளியிடுவதை நிறுத்தி விட்டார். இதனால் உலகத்தில் உள்ள அனைத்து கோடிக்கணக்கான ஜீவன்களும் பிராண வாயு இன்றி தவித்துப் போனது. தேவர்கள் வாயு பகவானிடம் கோபம் தணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் அந்த வாயுபகவானின் கோபம் சிறிதும் குறையவில்லை. ★அதன் பிறகு பிரம்மனும் இந்திரனும் வாயுதேவனிடம், உனது மகனுக்கு எந்த விதமான ஆயுதத்தாலும் மரணம் வராது. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழும். அது வரை மரணம் அவன் அருகில் நெருங்காது என்ற வரத்தை கொடுத்தார்கள். இதனால் நீ சிரஞ்சீவி என்னும் பட்டத்தை பெற்றாய். இந்த பட்டத்தையும் பலத்தையும் பெற்ற நீ அதனை மற்றவர்களை போல் எங்கும் துஷ்பிரயோகம் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாய். இந்த கடலை தாண்டுவது உனக்கு பெரிய காரியமில்லை. ★ராம காரியத்திற்காக உனது பராக்கிரமத்தை காட்டும் நேரம் வந்து விட்டது. உன்னால் விரும்பிய அளவிற்கு உனது உடலை பெரிதாக்கிக் கொள்ள முடியும். கடலை தாண்டும் சக்தியுடைய நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன்னை நாங்கள் அனைவரும் சரண் அடைகிறோம் அனுமனே! இனியும் தாமதிக்க வேண்டாம். உன்னுடைய உண்மையான பலத்தை அறிந்து கொண்டு, அதனை செயல் படுத்து. ஒரே தாவலில் இந்த கடலைத் தாண்டி இலங்கையை சென்றடைந்து, ராம காரியத்தை செய்து முடித்து, வானரங்களின் துயரை தீர்ப்பாய் என்று அனுமனின் அற்புதமான பராக்கிரமத்தை ஜாம்பவான் தட்டி எழுப்பினான். ★ஜாம்பவான் அனுமனின் பெருமையை கூறும்போது, அனுமன் தன் தலையை குனிந்து மௌனமாக புன்னகைத்தான். ராமகாரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுமன் சங்கல்பம் செய்து கொண்டார். அனுமன் தன்னுடைய சக்தியை உணர தொடங்கி அதனை வெளிக்காட்டினார். வானரங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அனுமனின் உடலும் தேஜசும் வளர்ந்து கொண்டே இருந்தது. அதனை கண்ட அங்கதனும் மற்ற அனைத்து வானரங்களும் வியந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். ★நம்பிக்கையுடன் ஆவேசமாக ஜாம்பவானிடம் பேசுவதற்கு ஆரம்பித்தார் அனுமன். தனக்கு ராமரின் அருளும், தங்களின் ஆசியும் இருந்தால் ஓர் பறவை போல் கடலை கடந்து செல்வேன் என்றான். ராவணன் தூக்கிச் சென்ற சீதையை தேடிக் கண்டு பிடித்துவிட்டு திரும்பி வருவேன். இது நிச்சயம். சந்தேகம் சிறிதும் வேண்டாம் நான் வரும் வரையில் இங்கேயே எனக்காக நீங்கள் காத்திருங்கள். நாம் அனைவரும் ஒன்றாகவே கிஷ்கிந்தைக்கு செல்வோம் என்றார். அதன்பிறகு கடல் தாண்டி இலங்கைக்குச் செல்வதற்கு தகுந்த இடத்திற்கு சென்று மனதை ஒரு நிலையாக நிலைப்படுத்தினார். சூரியன், இந்திரன் மற்றும் வாயு தேவனையும், பிரம்மாவையும் தியானித்து வணங்கினார். உடலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு பூமியை தன் காலால் மிதித்து கைகளால் அடித்து இலங்கைக்கு தாவினார் அனுமன். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை.................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduZ3i%2BmZv56zyE9bY6d%3Db5%3DEY_CDb04OHpk5gmYRGixNA%40mail.gmail.com.
